Thursday 24 December, 2009

மங்காப் புகழ் கொண்ட மக்கள் திலகமே..! - எம்.ஜி.ஆரின் நினைவுநாள் கவிதை




கண்டியில் பிறந்த
கண்ணாடி வைரமே..!
கேரளத்தில் கால் வைத்த
கற்பூரத் திலகமே..!
தமிழகத்தில் தலையெடுத்த
தங்கத் திலகமே..!
மங்காப் புகழ் கொண்ட
மக்கள் திலகமே..!

படிக்காத மேதையான
காமரசரின் வழி நின்றாய்..!
கல்லாத பிள்ளைகளுக்கு
கல்வி தரும் தந்தையானாய்..!
உணவில்லாத பிள்ளைகளுக்கு
உணவளிக்கும் அன்னையானாய்..!
வெறுங்காலில் பள்ளி சென்ற பிள்ளைகட்கு
காலணி வழங்கிய கர்ணனாய்..!
கந்தலாடை அணிந்த மாணவர்கட்கு
புத்தாடை வழங்கிய புரவலனானாய்..!

வறியோர்க்கெல்லாம்
வாரிக் கொடுத்து வள்ளலானாய்..!
எதிரிகளுக்கு நன்மை செய்து
எல்லோர்க்கும் நண்பனானாய்..!
பொன் பொருளில்லார்க்கு
பொன் மனச் செம்மலானாய்..!
இலங்கைத் தமிழர்களுக்கு இரந்து
உண்மைத் தமிழனாக மாறினாய்..!
நின் காலத்தில் ஆண்மையுடன்
ஆட்சி செய்த ஆண்மகனானாய்..!
ஏழைகளின் குறிப்பறிந்து ஏற்ற
திட்டங்கள் வகுத்த ஏந்தலானாய்..!
இல்லாதோர் வாழ்வில்
ஒளியேற்றிய ஒளி விளக்கானாய்..!
எல்லோரின் இதயங்களிலும் இடம்பிடித்து
அவர்களின் இதயக்கனியானாய்..!
அண்ணாவின் வழி நின்று
அன்னமிட்ட கையானாய்..!

என்னென்று சொல்ல நின் புகழை..!
எழுத்துக்கள் போதவில்லை
உன் புகழ் சொல்ல..!
ஏடுகள் தேவையில்லை
உன் புகழ் சொல்ல..!

கல்லாத பரம்பரையில் வந்தவனுக்கு
கல்வி கற்க வழி வகுத்த வள்ளலே..!
தமிழகத்தை ஆட்சி செய்த
தங்கத் திருமுகத் தமிழே..!
இலங்கைத் தமிழர்க்கு கரம் கொடுத்த
கார் வண்ண முகிலே..!
உன் காலத்தில் பயின்ற
மாணவர்களில்
அடியவனும் ஒருவனானேன்..!
நின் திருமுகம் காணாத
தீயவனானேன்..!

நீ இருந்து செய்த
சாதனைகள் கொஞ்சமல்ல..!
இருந்திருந்தால் நீ செய்யவிருக்கும்
சாதனைகளுக்கும் பஞ்சமல்ல..!
உனை இழந்து தவிக்காத
நெஞ்சங்களும் நெஞ்சமல்ல..!

எங்களுக்கு மூச்சளித்து
உன் மூச்சை நிறுத்திக் கொண்டாய்..!
எங்களுக்காக துடித்த நீயோ
உன் இதயத் துடிப்பை நிறுத்து விட்டு
எங்களை துன்பத்தில் துடிக்க விட்டாய்..!
கடல் போன்ற மனதைக் கொண்டு கடைசியில்
கடற்கரையில் தூங்குகின்றாய்..!
சந்தனமாய் மணம் பரப்பிய நீ - கடைசியில்
சந்தனப் பெட்டியில் சாந்தமானாய்..!

நீ இறந்தாலும்
ஏழைகளின் இதயங்களில்
என்றும் வாழுகின்றாய்..!
நாடோடியாய் இருந்த நீ
நம் மக்களின் மனதில்
நாடோடி மன்னனாய் வீற்றிருக்கின்றாய்..!
உலகம் சுற்றிய வாலிபனே..!
இந்த பூமி உனைப் பிரிந்து
இன்றோடு 22 ஆண்டுகளாயிற்று..!
எங்களின் கண்களும் குளமாயிற்று..!
மனங்களும் கனமாயிற்று..!

(எங்களின் இதயக்கனிக்கு என் கண்ணீர் கவியாஞ்சலி சமர்ப்பணம்)



Tuesday 1 December, 2009

எயிட்ஸ் எனும் எமன்..! - வசன கவிதை



குரங்கிலிருந்து
மனிதன்
வந்தான் சரி -
இது டார்வினின்
உயிரியில் பரிணாமக்
கொள்கை...

குரங்கிலிருந்து
மனிதனுக்கு
எயிட்ஸ் வந்ததா..? -
இதென்ன
உயிர்க் கொல்லிக்
கொள்கையா..?

பெண்ணின்றி
ஆணில்லை...
ஆணின்றி
பெண்ணில்லை...
ஆதாம் ஏவாள்
காலத்துக் கொள்கை
என்பர் - சரி...

எயிட்ஸ்
இன்றி மனித
இனமே இல்லை
என்ற நிலையை
உருவாக்குவது
எந்தக் கொள்கையப்பா..?

இன்பத்தை
நுகர்வதில்
இரு பாலருக்கும்
உரிமை உண்டு...
உணர்ச்சிகள் உண்டு...
அதற்கென உறவும் உண்டு...

மறுக்கவில்லை
உமது மன உணர்ச்சிகளை...
உமை யாரும்
மதிக்காமல்
இருக்கவில்லை...

நோய், பிணி, மரணம்
இன்பம், துன்பம்
என அனைத்தும்
இரு பாலருக்கும்
பொதுவாகும்...
அதுவே இயற்கையின்
படைப்பாகும்...

ஒருவனுக்கு
ஒருத்தியென வாழக்
கற்றால்...
ஒருத்திக்கு
ஒருவனென வாழக்
கற்றால்...
ஒப்பற்ற வாழ்க்கை
உங்கள் கையில்
இன்பங்கள் எப்போதும்
உங்கள் பையில்

சில்லறையை வீசி விட்டு
சிற்றின்பம்
நுகர்வதற்க்கு முன்
சிந்தையில்நிறுத்துங்கள்...
முடிந்த பின்னால்
சீரழிந்து போவீர்கள்
என்பதை..?

உமை நம்பி
மனையுண்டு
குழந்தையுண்டு
கோவிலெனக்
குடும்பமுண்டு...
குணத்தைக் கெடுத்துக்
கொள்ளாதே...
கொடும் எயிட்ஸை
நீ வாங்காதே...


ஐந்து நிமிட
சுகத்திற்கு
அற்பமாய் உன்
ஆயுளை
அழித்துக் கொள்ளாதே...

*****

நண்பனொருவன்
செய்த வினை
அவன் மனையை பாதித்தது
அவனுக்கு பிறந்த மகவைப் பாதித்தது
நோயின் கொடுமை தாளாமல்
விரைந்து மாண்டான் அவன்...

விந்தால் கெட்டான் அவன்...

அன்பு மொழி பேசும்
மனையாள்
செய்த பாவமென்ன...
அவள் பிறந்த வீட்டின்
ராஜ வாழ்க்கை
அழிந்து போவதென்ன...

கணவனுடன்
வாழ வந்த கண்மணிக்கு
அவள் கணவன்
கொடுத்த பரிசு அது
கொடிய நோயன்றோ...
உயிர்க்கொல்லி நோயன்றோ...

கட்டிய கணவனுடன்
வாழ வந்த கண்மணி
உயிர்க்கொல்லி நோயுடன்
வாழ்கின்ற கொடுமை போகுமோ
அவள் கோலம் மாறுமோ...

அவன் செய்த பிழையால்
அவன் மனைவி
தப்பவில்லை...
அந்தோ...
அவர்கள் குழவியும்
தப்பவில்லை...

வாழ வந்த
அக்குழந்தைக்கு
பிறப்பு வாயிலிலே
வாய்க்கரிசி...
வீசி விட்டு மாண்டானே
எயிட்ஸால்தான் வீழ்ந்தானே...

பூக்க வந்த பூவது
பாழும் மண்ணில் பூத்தது
எயிட்ஸ் நோய்க் குழந்தையாய்...
அக்குழந்தை செய்த பிழையென்ன
அனாதையாய் நிற்பதென்ன
ஆதரவு காட்ட யார்..?
அற்பாயுளில் போவதார்..?

போதுமடா இக் கொடுமை
பொல்லாத நோய் இதடா...
உயிர் குடிக்கின்ற
நோயிதுடா...
இல்லாளை நேசியடா
இல்லை உனக்கு துன்பமடா...

*****



Friday 13 November, 2009

என் கேள்வியும்..? பாரத மாதாவின் பதிலும்..! - வசன கவிதை



ஏ... பாராத மாதா
பார்த்தாயா உன் பாமர மக்கள்
படும் நிலையை..?
பசியையும், பட்டினியையும்
உடன் பிறவா உறவுகளாகக்
கொண்டுள்ளனரே..!?

பரவேஷம் போடும்
அரசியல் நாய்களின்
வெறி பிடித்த வாயைப்
பார்த்தாயா..?
பாமரனின் கழுத்தைக்
குதறிச் சிரிக்கும்
அந்நாய்களின் வெறியாட்டத்தைக்
கண்டாயா..?

அரசியல் சுரண்டல்கள்
ஒருபுறமெனில்
சாதிக் கொடுமையும்
மதப் பேய்களின்
மதவெறிக் கொலைகளும்
தினம் பல உயிர்களைப்
பலி கொள்கின்றதைப் பார்த்தாயா..?

பாரடி பாரத மாதா...
உன் மக்கள் படும் துயரை...
இனியும் ஏனடி மவுனம்..?
உன் நேர்மையெனும்
நெற்றிக்கண்ணால்
அராஜகம் செய்யும் அரசியல் நாய்களை
அடியோடு அழித்து விடு..!

அன்பு எனும் அமிழ்தத்தைக் கொண்டு
சாதி, மதப் பேய்களை
சடுதியில் ஒழித்து விடு..!
ஏற்றத் தாழ்வு எனும்
எச்சில் சகதியை
எளிதில் போக்கி விடு..!

செய் இவற்றையெல்லாம்
செவ்வனே செய்...
அதுவும் இப்பொழுதே செய்..!
இவர்களெல்லாம்
உன் பிள்ளைகளன்றோ..?

ஏனடி இன்னும் மவுனம்
ஏன் இந்த மவுனம்...
பதில் சொல்லடி பாரத மாதா..?

'என்னிடம் கேள்வி கேட்கும்
கெட்டிக்காரா..!
சொல்கிறேன் கேளடா..?

அடே மனிதா...
இவைகளெல்லாம்
உங்களால் விளைந்தது காண்..!
வருணாசிரமத்தை
வகுத்தது நீங்கள்...
வண்ணங்களைப் போல்
எண்ணத்திற்கொரு
சாதியைப் புகுத்தியது நீங்கள்...
மதம் கொண்ட யானைப் போல்
மதங்களை உருவாக்கியதும் நீங்கள்...

சாதி, மதமெனும் விஷ விதையை
உங்களுக்குள் விதைத்து
அனைவரிடத்தும்
விரவ விட்டதும் நீங்களே..!
இப்போது அறுவடை செய்கிறீர்கள்..!
அதன் பலனை அனுபவிக்கிறீர்கள்..!

இவைகளனைத்தும்
உங்களால் விளைந்ததே...
இன்னும்
விளக்கட்டுமா..?
பொருள் விளங்க விளக்கட்டுமா..?

அரசியல் நாய்களின்
வெறியாட்டமும் உங்களால்
விளைந்ததே...
உங்களுக்கு எங்கேயடா போயிற்று
பகுத்தறியும் ஆறாம் அறிவு..!

விலங்குகள் போல்
உங்களை நீங்களே ஏனடா
அழித்துக் கொள்கிறீர்கள்..!
சுரண்டல்கள் என்ற பெயரிலும்
ஏமாற்று வழிகளிலும்
ஏனடா எல்லோரையும்
அழித்துக் கொள்(ல்)கிறீர்கள்..!

உங்களை நீங்களே
திருத்திக் கொள்ளுங்கள்...
விழித்தெழுங்கள்...
வீணர்களை விரட்டியடியுங்கள்
நலம் பெறுவீர்கள்..!'

அசீரீரியாய் ஒலித்து மறைந்தது
பாராத மாதாவின் குரல்..!

அற்ப மனிதர்களே
அன்பு மட்டுமே
அன்பை விளைவிக்கும்..!
அறிவு மட்டுமே
அறியாமையை அழித்து
ஆற்றலைக் கொடுக்கும்..!
விழிப்புணர்வு மட்டுமே
வெளிச்சத்தைக் கொடுக்கும்..!

இனியேனும் திருந்துங்கள்
நீங்கள் பாரதத்தைக்
காப்பாற்ற வேண்டாம்..!
உங்களை நீங்களே
நல்லவழியில்
காப்பாற்றிக் கொள்ளுங்கள்...
நம் பாரதம் தானாகவே
காப்பாற்றப்படும்..!

(2004 அக்டோபர் 11 -ம் தேதி, காலை 10.10 மணியளவில் பண்ருட்டியிலிருந்து கண்டரக்கோட்டைக்கு செல்வதற்காக, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது, எழுதிய வசன கவிதை... சிற்சில மாற்றங்களுடன் இங்கே மீள்பதிவிடுகிறேன்...)




Tuesday 3 November, 2009

பூரண சந்திரன்..! - வசன கவிதை

நான்…
பூரண சந்திரன்…
வானத்து நிலவு…
என்றும் குளிர்ச்சியானவன்…
எளிதில் அன்பிற்கு அடிமையாகுபவன்…
நிலவைப் போல் வெள்ளை மனதுடையவன்
என்றெல்லாம்
என்னுடன் பழகிய என்னவர்கள்…
சொல்லக் கேட்டிருக்கிறேன்…



நான் பூரண சந்திரன்
எனக்கு வளர்பிறையுமில்லை…
தேய் பிறையுமில்லை
நான் என்றும் நானாகவே
முழுச் சந்திரனாகவே வாழ்கிறேன்…
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…
வாழ்ந்து கொண்டிருப்பேன்…

நான் பிறரை நோக்கும் பார்வை…
என் சார்ந்ததாக
என் மனம் சார்ந்ததாக
இருக்கிறது…
இது சரியெனில்… அது சரியே…
இது தவறெனில்.. இது தவறே…

நான் எல்லோரையும்
சமநோக்குடனே பார்க்கிறேன்
பிறர் என்னைப் பார்க்கும் பார்வைகள்
வித்தியாசமானவைகளாக
இருக்கின்றன..!
அவர்கள் என்னை
எவ்வகையில் பார்க்கிறார்களோ…
நான் அவர்களுக்கு
அவ்வகையிலேயே காட்சியளிக்கிறேன்..!

என்னைப்
புரிந்து கொண்டவர்களுக்கு
முழுமையாகப்
புரிந்து கொண்டவர்களுக்கு
நான் பூரண சந்திரனாக
காட்சியளிக்கிறேன்..!

என் மேல்…
என் வளர்ச்சியின் மேல்
அக்கறை கொண்டவர்களுக்கு
நான் வளர்பிறையாக
காட்சியளிக்கிறேன்…

என் மேல் அன்பு வைத்துள்ள
அன்பு வைத்துக் கொண்டிருக்கிற
அன்பு உள்ளங்கள்
அத்தனை பேருக்கும்
மூன்றாம் பிறையாக காட்சியளிக்கிறேன்…

என்னை
மறக்க நினைப்பவர்களுக்கும்
வெறுக்க நினைப்பவர்களுக்கும்
நான் தேய் பிறையாக
காட்சியளிக்கிறேன்…

என்னை
விரோதியாகப் பார்க்கும்
ந(ண்)பர்களுக்கு
அமாவாசையாகக்
காட்சியளிக்கிறேன்…



நான் பூரண சந்திரன்
எனக்கு வளர்பிறையுமில்லை…
தேய் பிறையுமில்லை
பிறர் என்னை
எவ்வகையில் பார்க்கிறார்களோ…
நான் அவர்களுக்கு
அவ்வகையிலேயே காட்சியளிக்கிறேன்..!

(பணியின் காரணமாக நான் பண்ருட்டியில் தங்கியிருந்த போது, 17.08.2004 அன்று நள்ளிரவு,, எனது நாட்குறிப்பேட்டில் (11.30 மணிக்கு) எழுதி வைத்த வசன கவிதை… இது நம் அனைவருக்கும் பொருந்தும் என்பதால் இங்கே பதிவிலிடுகிறேன்…)




Thursday 24 September, 2009

என் தேகத்தில் சந்தேகம்..! - வசன கவிதை

அழகிய நீர்நிறை குளத்தில்
வெண்தாமரை வீற்றிருப்பதை
கண்டிருக்கிறேன்... களித்திருக்கிறேன்...
இன்றோ சாலையில் காண்கிறேன்
ஓர் அழகிய வெண்தாமரை
நீரில் நனைந்தபடி..!

என்ன விந்தையடா..?
யார் செய்த மாயமடா..?
சாலையில் மழை பெய்து கொண்டிருக்க
வெண்தாமரை நனைந்தபடி வருகிறதே..!
தாமரையை நீர் நெருங்காதே...?

என் தேகத்தில் சந்தேகம் முளைக்க
அத்தாமரையை நெருங்கினேன்...
அருகில் சென்றபோதுதான் தெரிந்தது
அடடே.. இது அன்னப்பறவையல்லவா..?

அழகிய அன்னம் அற்புதமாக
மழையை ரசித்தபடி நின்றிருக்க
அதனிடம் வினவினேன்...
மழை கண்டு வந்தாயோ அன்னமே..?
இந்த மனம் வேண்டி வந்தாயோ
பொற்கிண்ணமே..?

பதிலில்லை...
அதற்கு பதிலாக
தன் வெண்முத்து பற்கள்
தெரியும்படி மின்னலாய்
சிந்திய புன்னகையை என் முகத்தில்
விசிறியடித்தது...

கிறங்கிப் போனேன்...
மழையே அழகு..!
அதில் நீ நனைவது அதைவிட அழகு
இதற்கு நான் யாருக்கு நன்றி சொல்ல
மழைக்கா..? உனக்கா..?

(தன் காதலி மழையில் நனைந்தபடி, மழையை ரசித்துக் கொண்டிருக்க... அவளது காதலனோ அவள் நனையும் அழகைக் கண்டு கவிதையாக உளறுகிறான்.. அதன் விளைவே இக்கவிதை...)



Thursday 17 September, 2009

பகுத்தறிவுப் பகலவரே..! - வசனகவிதை




பகுத்தறிவுப் பகலவரே..!
புரட்சிக்
கருத்துக்களை பகர்ந்தவரே..!

கொடுஞ் சாதிகளை எதிர்த்தவரே..!
சாதிக்
கொடுமைகளை கொளுத்தியவரே..!

பெண்ணியததின் திருமகரே..!
பெண்
விடுதலையின் தலை மகரே..!

அறிவார்ந்த பெரியாரே..!
திராவிடத்தின்
அறியாமையினை அகற்றியவரே..!

மூடநம்பிக்கைகளை ஓழித்தவரே..!
எதையும்
முத்தாய்ப்பாய்ச் சொன்னவரே..!

ஏன்… எதற்கு… எப்படி என்றவரே..!
எதையும்
ஆராய்ந்து செய் என்றவரே..!

ஏற்றத் தாழ்வை அழித்தவரே..!
எல்லோரும்
எங்கும் சமம் என்றவரே..!

ஆரியத்தை அழித்தவரே..!
தமிழ்த்
திராவிடத்தை வளர்த்தவரே..!

ஒடுக்கப்பட்டவர்களின் ஒளியாரே..!
அவர்தம்
உரிமைகளை மீட்டெடுத்தவரே..!

வைக்கம் போராட்ட வீரரே..!
தீண்டாமையை
தீயிட்டழித்த தமிழ்த் தீரரே..!

விதவை மணத்தினை நடத்தியவரே..!
அதை
உலகெங்கும் நடாத்தியவரே..!

இறை மறுப்பை காட்டியவரே..!
பலருக்கும்
பகுத்தறிவை ஊட்டியவரே..!

உண்மையின் பாதுகாவலரே..!
பெண்ணியத்தின்
பெரும் போர் வீரரே..!

சின்னத்தாய் பெற்றெடுத்த சீலரே..!
தமிழ்த்தாய்
தத்தெடுத்த தமிழருவிக் காவலரே..!

இன்றோடு நீ பிறந்து 131 ஆண்டுகளாயிற்றே..!
இப் பொன்னாளில்
உன்னை நினைப்பவர்கள் சிலரே..!



Tuesday 15 September, 2009

பேரறிஞர் அண்ணா... - வசன கவிதை



பெரியாரின் தளபதி நீ..!
வறியோரின்
விளை நிலம் நீ..!

திராவிடத்தின் உறுப்பு நீ..!
மூடத்தனத்தை
சாம்பலாக்கிய நெருப்பு நீ..!

காஞ்சி நகர் வைரம் நீ..!
தமிழ்க்
கண்டெடுத்த வைடூரியம் நீ..!

சென்னையை மாற்றினாய்  நீ..!
நேர்த்தியாய்
தமிழ் நாடென்றாக்கினாய் நீ..!

தமிழை வளர்த்தாய் நீ..!
தமிழை
வளர்த்த தாய் நீ..!

பேரறிஞப் பெருமகனாம் நீ..!
தமிழகத்தின்
தலை மகனாம் நீ..!

அன்னமிட்ட கை நீ
தமிழ்க்
கன்னலிட்ட வைகை நீ..!

உதய சூரியன் நீ..!
இம்மண்ணில்
இன்று உதித்தவனும் நீ..!

நூற்றாண்டின் சூரியன் நீ..!
தமிழ்ச்
சான்றோரின் சந்திரன் நீ..!

திராவிடத்தின் இருப்பு நீ..!
ஆரியப்
பகைவர்க்கு நெருப்பு நீ..!

பகுத்தறிவுச் சுடர் நீ..!
பலருக்கு
வாழ்வழித்த சுடர் நீ..!

நூற்றாண்டு கண்டாய் நீ..!
தமிழே
எமையுன்னோடு சேர்ப்பாய் நீ..!



Tuesday 1 September, 2009

கவியமுதம் - வசனகவிதை

அன்பானவளே
நீ இங்கு நலம்
நான் அங்கு நலமா..?

நமக்கு குழந்தை - அதிலும்
நான் விரும்பிய பெண் குழந்தை
பிறந்து விட்டதென்றாய்..!

அப்பெண்ணிற்கு அமுதமென்று
பெயரிட்டதாகவும் நுண்ணலைபேசி மூலம்
உச்சி முகர்ந்'தாய்..!'

அமுதம் வந்தது கண்டு
மட்டற்ற மகிழ்ச்சியில்
என் மனம் துள்ளிக் குதிக்கிறது..!

அத்தூயவளைக் காண
எந்தன் உள்ளம்
ஏக்கத்தில் துடிக்கிறது..!

பாழும் பணியின்
காரணமாக
நான் சென்னையில்..!

பாசத்தின் காரணமாய்
நீயும் என் சேயும்
என் பெற்றோரிடத்தில்..!

விரைந்து வருவேன்...
விண்மீனைப் பார்ப்பேன்
என் மீனை ரசிப்பேன்..!

கட்டிக் கரும்புகளே... கமல மலர்களே...
காத்திருங்கள்
காற்றினும் கடிந்து வருகிறேன்..!

என் மகள் பிறந்தாளென்ற
செய்தி கேட்டதும் - என்
எழுதுகோல் காகிதத்தை முத்தமிட...

நாம் பெற்ற
அமுதத்திற்கு
இதோ கவியமுதம்..!

உன்னில் நான்...
என்னில் நீ...
நம்முள் அமுதம்..!

விண்ணில் நீ...
உன் கண்ணில் நான்...
தாய் மண்ணில் அமுதம்..!

நினைவில் நான்...
கனவில் நாம்...
உருவில் அமுதம்..!

என் நினைவுகள் நீ ரசிக்கும் பாடலில்...
உன் உறவுகள் நம் தேடலில்...
அமுதம் நம் கூடலில்..!

நீ பொறுமை...
நான் கருமை...
அமுதம் நம் பெருமை..!

நீ எந்தன் பிரியம்...
நானுந்தன் பிரியம்...
அமுதம் நம் பிரியம்..!

நான் உந்தன் மோகம்...
நீ எந்தன் தாகம்...
அமுதம் நம் ராகம்..!

நீ பொன்மான்...
நான் பொல்லாத மான்...
அமுதம் நம் புள்ளிமான்..!

(பணியின் காரணமாக நான் சென்னையில் இருக்க, என் காதலி வேறிடத்தில் இருக்கிறாள்... அவளது கனவில் 'எனக்கும், அவளுக்கும் திருமணமாகி விட்டது என்றும், அவள் ஆசைப்படி பெண் மகளைப் பெற்று விட்டாள் என்றும்... என் பெற்றோருடன் இருக்கும் அவள், என்னிடம் அலைபேசி மூலம் மகளைப் பெற்ற மகிழ்ச்சியை தெரிவிக்கிறாள்... அப்பெண் மலருக்கு நான் ஆசைபட்டபடி அமுதம் என பெயர் சூட்டியதாகவும் தெரிவித்தாள்...  மறுநாள் என்னிடம் அலைபேசியில் இக்கனவைத் தெரிவித்து, கவி புனையும் படி கேட்டாள்... அதன் விளைவே இந்த வசன கவிதை..)




Monday 24 August, 2009

ஏற்றத்தாழ்வு எனும் பிணி..!

பிரபல மருத்துவர் அவர்...
பிணிகளைத் தீர்ப்பதில் வல்லவர்
அரசு மருத்துவமனையில்
பணியாற்றுபவர்...
பணி நேரம் போக தனியாகவும்
மருத்துவம் பார்ப்பவர்...

அரசு மருத்துவ மனையில்
அமர்ந்திருந்த
மருத்துவரிடம் வந்தார்
ஓர் ஏழை...

என்னென்று வினவினார்
மருத்துவர்

ஐயா...
வயிற்றில் சுரீரென்று வலி
வாயினில் புண்...
தாளமுடியவில்லை
பிணி நீக்கவேண்டும் ஐயா...

மருத்துவர் தன்
பரிசோதனைகளைச் செய்தார்...
உடலில் உள்ள குறைகளை
ஓரளவு கண்டறிந்து கொண்டபின்
ஏழையிடம் வினவினார்...
ஐயா நேற்று என்ன சாப்பிட்டீர்..?

ஒன்னும் சாப்பிடலீங்க
சாயங்காலம்தான்
கொஞ்சம் கஞ்சி குடிச்சேன்...

அதற்கு முதல் நாள்
என்ன சாப்பிட்டீர்..?

காலையில் கொஞ்சம்
பழையது சாப்பிட்டனுங்க...
அப்புறம் ராவுப்பொழுதுக்கு
கொஞ்சம் கஞ்சிங்க...

பிணிக்கு காரணம் புரிந்தது
சரியான ஆகாரம் அந்த
ஏழைக்கு இல்லை...
அதனால் வந்த பிணி இது என்று...

தேவையான மருந்துகளை
குறித்துக் கொடுத்து...

ஐயா உணவு உண்டபின்
இந்த மருந்துகளை
உட்கொள்ளுங்கள்...

சாப்பிட்டதுக்கு பொறவு
மாத்திர சாப்பிடனும்னு
சொல்றீங்க சாமி...
அந்த சாப்பாடுதாங்க
என் வீட்ல பிரச்சினை...
உழைக்கத் தயரா இருந்தும்
வேலை வெட்டியில்ல...
அதனால
எங்க சட்டியும் காயுது
வட்டியும் காயுது...

அதனாலதாங்க உங்க
வயிறும் இப்ப நோகுது...
என்று பதிலிறுத்த மருத்துவர்
கவலை கொள்ளாதீர்
நாளை வந்து எனை பாரும்
வேலைக்கு வழி சொல்கிறேன்...
என்று ஏழையை
வழியனுப்பினார்
நம் மருத்துவர்.

மாலை வேளையில்
தனது தனி மருத்துவமனையில்
மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார்
அம் மருத்துவர்.

வாசலில் வந்து நின்றது
வாட்டமான கார் ஓன்று
அதிலிருந்து நடக்க முடியதாபடி
நடந்து வந்தார்
அவ்வூரின் செல்வந்தர்களில்
ஒருவரான செல்வராஜ்...

டாக்டர்...
நடக்க முடியல...
மூச்சு வாங்குது...
வயிறு திம்முன்னு இருக்குது...

இதைச் சொல்லவே அவருக்கு
மேல் மூச்சுகீழ் மூச்சு வாங்கியது...

பரிசோதித்தார் மருத்துவர்
உங்களுடைய அன்றாட
உணவு முறை பற்றி
சொல்லுங்கள் என்றார்...

காலையில் டிபன்
மதியம் புல் மீல்ஸ்
மாலையில் சிற்றுண்டி
இரவு பிரியாணி
இடையிடையே நொறுக்குத் தீனி
இதுதான் என்னுடைய
அன்றாடஉணவு முறை...

நாளையே பிரசவித்துவிடும்
நிலையில்
அவரது வயிறு
உப்பிக் கொண்டு நின்றது...

பிணியின் காரணத்தை
அறிந்து கொண்ட மருத்துவர்
மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு

உணவு முறைகளை
மாற்றுங்கள்...
நொறுக்குத் தீனிகளை
ஒழியுங்கள்...
எளிய உணவுகளும்
காய்கறி, கனிகளையும்
சாப்பிடுங்கள்
தினமும் அரை மணி நேரம்
நடைப் பயிற்சி...
கார் வேண்டாம்
சைக்கிள் ஓட்டுங்கள்...
என்றார் மருத்துவர்...

தனிமையில் இருந்த
மருத்துவரின் சிந்தையில்....
காலையில் வந்த
ஏழையின் வயிறு தோன்றியது...
சுவற்றில் ஓட்டப்பட்ட
காகிதம் போல்
கறுத்துச் சிறுத்த வயிறு...

மாலையில் வந்த
செல்வந்தரின் வயிறும்
தோன்றியது...

செல்வச் செழிப்பும்
உணவுக் கொழிப்பும் மிகுந்த
பானையைப் போன்ற வயிறு...

இருவரும் ஒரே திசையிலிருந்துதான்
வருகின்றனர்... ஆனால்
எதிரெதிர் திசையில் நிற்கின்றனர்...

ஏழைக்கு... வேலையுமில்லை
உணவுமில்லை...
பசியும் பிணியும் வாட்டுகிறது..?

செல்வந்தனுக்கு வேலையுமுண்டு
அதிகப்படியான உணவுமுண்டு
தொப்பையும், பிணியும்
வாட்டுகிறது..?

இந்த ஏற்றத் தாழ்வு
எங்கிருந்து வந்தது?
இதை எப்படி ஒழிப்பது..?

இருப்பவன் இல்லாதவனுக்கு
கொடுத்து உதவ வேண்டும்..!

முடிகின்ற காரியமா இது?

எல்லோரும் சமம்
என்ற நம் அரசின்
கொள்கை, கோட்பாடு
இங்கு கோமாளித்தனமாகி விட்டதே..?

இல்லாதவன்
உழைக்கத் தயாராக இருந்தும்
வேலையுமில்லை..?
வேளா வேளைக்கு
உணவுமில்லை..?

அட என் பாரதமே...
இந்த ஏழைகள் நிலை
என்று மாறும்..?
அவர்களின் துயரங்கள்
என்று தீரும்..?

மருத்துவரின் மனதில்
ஆயிரம் கேள்விக்கணைகள்...
பதிலளிப்போர் யார்..?
பாமர மக்களைக் காப்பவர்கள் யார்..?

உங்களுக்காவது
விடை தெரிந்தால் சொல்லுங்களேன்..!

(இதை எழுதிய சூழல்: பண்ருட்டியில் பணி நிமித்தமாக அறை எடுத்து 6 மாத காலம் தங்கியிருந்தேன். அதில் ஓரு நாளான 16.10.2004, அன்று காலை 8.00 மணியிலிருந்து, காலை 8.30-க்குள் எழுதி முடித்து விட்டேன். அதை சிற்சில மாற்றங்களுடன் இங்கே வெளியிடுகிறேன்..)



Wednesday 19 August, 2009

என் அறிமுகம்

வசன கவிதை எழுதுவது எப்படி? அதன் விதிகள், இலக்கணங்கள் என்னென்ன என்பதை நானறியேன்... மகா கவி பாராதியின் வசன கவிதை படித்'தேன்'.

அதன்பிறகு, எனக்குள்ளும் அந்த ஆசை முளைத்துக் கிளைத்தது. எழுதத் துவங்கிவிட்டேன். எழுத்துப்பிழைகள் இருந்தாலும் கருத்துப் பிழையின்றி எழுதுவேன்...

வசனகவிதைக்குரிய இலக்கணங்களை மீறியருந்தால், தமிழார்வலர்கள், தமிழாய்ந்தவர்கள் இச்சிறுவனை மன்னித்தருள வேண்டுகிறேன். நன்றி